டெல்லி மாநில ஆம் அத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி. இவர் டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சராகவும் இருந்தார். கடந்த ஜூன் மாதம், சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அதில், திருமணமானது முதல் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், கொலை செய்யவும் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் சோம்நாத் பாரதி மீது கடந்த மாதம் 10-ம் தேதி வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமீன் பெற்றார். ஆனால், போலீசில் ஆஜராகாமல் சோம்நாத் பாரதி தலைமறைவாக இருந்ததால், அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, டெல்லி துவாரகா காவல் நிலையத்தில் சோம்நாத் பாரதி சரணடைந்தார். பின்னர் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நாட்களாக சோம்நாத் பாரதியிடம் அவரது மனைவி முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோம்நாத் பாரதியின் மனுவை ஏற்று இடைக்கால ஜாமின் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (அக்.5) ஒத்திவைத்த நீதிபதிகள், லிபிகா மித்ரா அன்றைக்கே தனது கருத்தினை தெரிவிக்கலாம் என்று கூறினர்.
மேலும், சோம்நாத் பாரதியின் மனைவி லிபிகா மித்ரா விரும்பினால், இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமான முறையில் பேசி தீர்வு காணலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


