அகில இந்திய முஸ்லிம் சட்டவாரிய துணை பொதுச்செயலரும் செய்தித் தொடர்பாளருமான அப்துல் ரஹீம் குரேஷி் இந்து கடவுளான ராமர் பிறந்தது பாகிஸ்தானில்தான்… அயோத்தியில் இல்லை என்று தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருப்பதால் புதிய தற்போது சர்ச்சை உருவாகி யுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் அகில இந்திய முஸ்லிம் சட்டவாரியமும் ஒருதரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அப்துல் ரஹீம் குரேஷி, “Facts of Ayodhya Episode (Myth of Ram Janmabhoomi)” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் எழுதப்பட்டுள்ளதாவது: வேதங்கள், புராணங்களில் கங்கை நதிக் கரையில் ராமர் பிறந்ததாக குறிப்பிடப்படவில்லை.
ராமரின் தந்தை தசரதன் ஆட்சி செய்த சப்த சிந்து என்பது ஹரியானா, பஞ்சாப்பில் தொடங்கி பாகிஸ்தான் வழியாக கிழக்கு ஆப்கானிஸ்தான் வரை விரிந்து கிடக்கும் பகுதி. இந்திய தொல்லியல் ஆய்வறிஞர் ஜாஸு ராமின் கருத்துப் படி, ராமர் பிறந்த இடம் பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் என்ற மாவட்டத்தில்தான். தற்போது இந்த நகரம் ரஹ்மான் தேரி என்று அழைக்கப்படுகிறது. முன்னர் இது ராம் தேரி என அழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக கட்டுக் கதைகள் கிளப்பிவிடப்பட்டன. இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக இந்த கதைகள் சொல்லப்பட்டன. இந்துக்களின் ‘யுகங்கள்” அடிப்படையில் ராமர் பிறந்தது என்பது 24 அல்லது 28வது திரேதா யுகத்தின் இறுதியில் எனப்படுகிறது. அதாவது சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பிறந்ததாக இது குறிப்பிடப்படுகிறது. உலகில் எங்குமே கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
சில நூல்களில் ராமர் கி.மு 5561 அல்லது கி.மு.7323 ஆகிய ஆண்டுகளில் பிறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கு எந்த ஒரு ஆதாரமுமே இல்லை. கி.பி. 1574ஆம் ஆண்டு துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில்தான் தற்போதைய அயோத்தியில் ராமர் பிறந்ததாக குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
ராமர் பிறந்தது அயோத்தியில் இல்லை பாகிஸ்தானில்தான் என அப்துல் ரஹீம் குரேஷி் எழுதியுள்ளதால் தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது.


