லண்டனில் நடந்து வரும் 14-வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று, தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுடன் மோதுகிறது.
இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் கால்இறுதியை எட்டுவதற்கான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
முந்தைய ஆட்டத்தில் நிறைய கோல் வாய்ப்புகளை வீணடித்த இந்திய அணி அதே தவறை மீண்டும் செய்யாது என்று இந்திய பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும்.



