பவானி சாகர் அணையில் கீழ்பவானி திட்டக்கால்வாயின் மதகுகள் வழியாகவும் மேட்டூர் அணையில் புள்ளம்பாடி, மேட்டுக்கால்வாய்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் அணையில் புள்ளம்பாடி, மேட்டுக்கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். இதேபோல, ஈரோடு பவானி சாகர் அணையின் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மாண கால்வாய்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 63ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர்மகசூல் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.



