சென்னை: பொங்கல் கொண்டாட்டத்துக்காக திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் துவங்கியது. ஆளுநர் புரோஹித் தனது உரையில், அனைவருக்கும் காலை வணக்கம். புத்தாண்டு வாழ்த்துகள். எளிமையான வாழ்க்கை வாழுங்கள். இதன் மூலம் ஊழல் ஒழியும். இதுவே எனது செய்தி என்று கூறினார்.
பின்னர் அவர் பேசியபோது, தமிழகம் பொருளாதார ரீதியில் வளமான மாநிலம்! ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு தமிழக அரசு வெற்றிகரமாக மாறியுள்ளது. ஜிஎஸ்டி அமலான பிறகு வழங்கப்பட வேண்டிய தொகை வழங்கப்படுவதில் தாமதம் ஆகிறது. தமிழகத்தில் 5,454 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வசூலாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாட, திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்!
அணை பாதுகாப்பு சட்ட முன்வடிவை திரும்ப பெற தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. சட்ட முன்வடிவில் உள்ள பலவற்றில் தமிழக அரசின் கருத்துகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்ட ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது, நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் குடிசை வீடுகளுக்கு பதில் கான்கீரீட் வீடுகள் கட்டித் தரப்படும்! கஜா புயல் பாதிப்பு மறு சீரமைப்புப் பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்!
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 மாநில வளர்ச்சிக்கு பேருதியாக இருக்கும்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை திகழ்கிறது! அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றப்படவேண்டும்.
தொழில் முனைவோர் தொழில் துவங்க, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
சென்னை, மதுரை, கோவையில் மின்சார பஸ்கள் இயக்கப்படும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள குடிசை பகுதியை மேம்படுத்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் உதவியுடன் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்…
- இவ்வாறு ஆளுநர் தனது உரையில் தகவல் தெரிவித்தார்.