யோசிக்கும் வேளை இது – 1
அனேகமாக எல்லாக் கருத்துக் கணிப்புகளும் வந்துவிட்டன. நாளை மறுநாள், முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்க இருப்பதாலும், அதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எந்தக் கருத்துக் கணிப்பும் வெளியிட இயலாது என்பதாலும், இனிக் கருத்துக் கணிப்புகள் வெளிவர வாய்ப்பில்லை.
கருத்துக் கணிப்புகளால் இடங்களைத் துல்லியமாகக் கணிக்க முடியாது. ஆனால் போக்கைக் கண்டறிய முடியும்!
இதுவரை வெளிவந்த எல்லாக் கருத்துக் கணிப்புகளும் வேறுபாடில்லாமல் ஒன்றைக் குறிப்பிட்டு வந்துள்ளன. அது பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது (காண்க படம்) நேற்று வெளியான டைம்ஸ் நவ் இறுதிக் கணிப்பும் அதைத்தான் தெரிவிக்கிறது (காண்க படம்)
இந்தக் கணிப்பும், நேற்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான வேறு கணிப்புகளும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் (30 முதல் 33 இடங்களில்) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றன. சாத்தியங்களை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று உண்டு.
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்குமானால் (தனித்துப் பெரும்பான்மை பெற்றோ, அல்லது சில கட்சிகளின் ஆதரவோடோ) அதில் தமிழகம் இடம் பெற வேண்டாமா?
எதிர்க் கட்சி வரிசைகளை நிரப்புவதால் என்ன பலன் கிடைத்துவிடும்?
நம் உரிமைகளுக்குக் குரல் எழுப்ப முடியும். உண்மைதான். ஆனால் உரிமைக்குரல் உணர்வுகளை வெளிப்படுத்துமேயன்றி வேறெதைச் சாதிக்கும்?
உணர்ச்சி நிலையிலேயே , அதுவும் ஒரு கொதி நிலையிலேயே ஒரு மாநிலம் இருப்பது அதன் வளர்ச்சிக்கு உதவுமா?
தமிழகத்தில் தழைத்து வரும் வெறுப்பு அரசியல் மற்றவர்களிடமிருந்து தமிழகத்திற்கு எதிராகத் திரும்பினால் என்ன ஆகும்?
உலகெங்கும் சிறுபான்மையருக்கு இரு வழிகள்தான் உண்டு. மொழிச் சிறுபான்மை யோருக்கும்தான். ஒன்று மோதல் (Confrontation) மற்றது அனுசரித்தல் (Conciliation)
மோதிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதற்கு இலங்கையும், அடையாளங்களை விட்டுவிடாமல் அனுசரித்துப் போனால் என்ன கிடைக்கும் என்பதற்கு சிங்கப்பூரும் நம் கண்ணெதிரே சாட்சிகளாக இருக்கின்றன.
இரண்டிலும் இழப்புக்கள் இருக்கும், மறுப்பதற்கில்லை. ஆனால் மோதலில் சேதம் அதிகம். சமரசங்கள் வலி தருவன. மறுப்பதற்கில்லை. ஆனால் சமரசம் இல்லாத வாழ்க்கை ஒன்றுண்டா? குடும்பத்தில், அலுவலகத்தில், வாழுமிடத்தில், இறுதியில் சுடுகாட்டில் கூட எத்தனை சமரசங்கள்!
யோசித்து வாக்களியுங்கள்.
தேர்தல்கள் எதிர்காலத்திற்கானவை.
– மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)