கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று யானை மீது வெள்ளிக் குடத்தில் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 4-ஆம் நாள் விழாவான நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை முன்னிட்டு, அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ வழிபாடு, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரிக்கப் பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதல், காலை 9 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த விநாயகர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனித நீர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊர்வலம் கோவிலை அடைந்ததும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களுடன், புனித நீரால் அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம், இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெற்றன.




