திருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)

Published:

thiruppavai 3 - 2026

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

விளக்கவுரை:

இரண்டாம் பாசுரத்தில் நோன்பினைக் கடைப்பிடிக்க என்ன செய்ய வேண்டும், விலக்க வேண்டியவை எவை, கைக்கொள்ள வேண்டியவை எவை என்றெல்லாம் சொன்ன ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் நோன்பினால் உலகத்துக்கு விளையும் நலன்களை எடுத்துக் கூறுகிறார்.

மகாபலி சக்ரவர்த்தி வார்த்த நீர் கையில் விழுந்தபோதே, ஆகாயம் அளவுக்கு வளர்ந்து தன் திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்த அந்த உத்தமனின் திருநாமங்களைப் பாடிக் கொண்டு, சுயநலனுடன் எதையும் வேண்டாமல், புருஷோத்தமன் மீது கொண்ட அன்பின் மிகுதியால் நோன்பு நோற்கிறோம்.
நோன்புக்காக இவ்வாறு சங்கல்பம் செய்துகொண்டு நீராடினால் நாடு எங்கிலும் தீங்கு எதுவும் இல்லாமல் சுபிட்சமாக இருக்க மாதம் மும்மாரி பொழியும்.

அந்த வளமையில், ஆகாயம் அளவுக்கு வளர்ந்து பெருத்துள்ள செந்நெல் பயிர்களின் நடுவே மீன்கள் துள்ள, அழகிய நெய்தலாகிற பூங்குவளை மலரில் விருப்பம் கொண்ட வண்டுகள் மயங்கி உறக்கம் கொள்ள, மாட்டுத் தொழுவத்தில் சலிக்காமல் பொருந்தியிருந்து இரு கைகளாலும் பிடித்து வலிக்க, பசுக்கள் மிகுதியான பாலை வழங்கி, பால் வெள்ளத்தாலே குடங்களை நிறைத்து நீங்காத செல்வம் நிறையும் படி செய்யும். பாவாய் நீ எழு என்று ஆண்டாள் நோன்பின் மகிமையை எடுத்துரைக்கிறார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

விளக்கம் – செங்கோட்டை ஶ்ரீராம்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img