சிவனின் அவதாரச் சின்ன அழகன்!

Published:

adhisankarar - 2026

பலமதங்கள் தத்துவத்தால் சண்டைகள் செய்து
கலகலத்த காலத்தில் வந்து கலவரமே
இல்லாமல் அத்வைத சித்தாந்த ஞானத்தை
எல்லோர்க்கும் தந்தார் சிவன்

சிவனின் அவதாரச் சின்ன அழகன்
அவனியிலே சங்கரப் பேரால் எவரும்
மதிக்கின்ற ஆளானார்! வாக்காலே வென்று
துதிக்கவே வைத்த துறவு.

துறந்த அவரைத்தான் பூமி பிறந்த
உறவெல்லாம் பற்றி ஒளிர்ந்து சிறந்தது;
கற்ற அவர்பாதம் கட்டித் தொழுததால்
உற்றதே உள்ளே ஒளி.

ஒளிரும் பலநூல்கள் உண்டாக்கி வைத்துத்
தளிருக்கும் பக்தி வளர அளித்தவர்
காலடி சங்கரர்; காலமெலாம் நன்றியுடன்
காலடி எண்ணல் கடன்

கடகடென ஓடிடும் காலம் மனமே !
திடமுடனே பக்திநீ செய்வாய் – கடமையாய்த்
தன்னுள் இறைபோலத் தான்தரணி யாவுமே
என்றே பணிந்தால் பலன்.

கவிதை: மீ. விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img