கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் விஜயராஜ மல்லிகா. இவர் ஒரு திருநங்கை இவரது கவிதைகள் பிரபலமானவை. இவருடைய குறிப்பிட்ட சில கவிதைகள், கேரளாவின் எம்.ஜி.பல்கலைக்கழகம் மற்றும் காலடி ஸ்ரீசங்கராச்சாரியா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்கெனவே பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
50 சிறந்த கவிதைகளைத் தொகுத்து `தெய்வத்தின்டே மகள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் மலையாள இலக்கிய உலகத்தினரால் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் புத்தகத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தின் மலையாளத் துறையில் பயிலும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு வெளியில் இருக்கும் பல்கலைக்கழகத்துக்கு அவரது புத்தகம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதை மலையாள கவிஞர்கள் வரவேற்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த கிரீஷ், மலையாளத்துறையின் தலைவரான பேராசிரியர் சந்தோஷ், சம்பிரிதா ஆகியோர், திருநங்கை விஜயராஜ மல்லிகாவின் புத்தகத்தை மூன்றாவது செமஸ்டர் பாடத்துக்குத் தேர்வு செய்துள்ளனர்.திருநங்கை விஜயராஜ மல்லிகாஎனது புத்தகம் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருப்பதை நினைக்கையில் தேசிய விருது கிடைத்ததுபோல உணர்கிறேன்.தனது புத்தகம் பல்கலைக்கழகத்தின் சேர்க்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள திருநங்கை விஜயராஜ மல்லிகா, “இது எனக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். தேசிய விருது கிடைத்துள்ளது போன்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதன் மூலம் திருநங்கைகள் குறித்தும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் விவாதம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியிருப்பதாகக் கருதுகிறேன்” என்றார்.
கவிஞர், சமூக சேவகர், ஆசிரியர், ஆலோசகர், தொல்பொருள் ஆய்வாளர், இசைக்கலைஞர் எனப் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டுவரும் விஜயராஜ மல்லிகா, விரைவில் அடுத்த கவிதைப் புத்தகத்தை வெளியிட இருக்கிறார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது புத்தகம் பாடமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று பார்வையிடவும் அவர் முடிவெடுத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் புத்தகத்துக்கு `ஆண் நதி’ எனப் பெயரிட்டுள்ள அவர், `மல்லிகா வசந்தம்’ என்ற பெயரில் சுயசரிதையும் எழுதி வருகிறார்.