முதல்வர் ஜெயலலிதாவுக்கு…மாரடைப்பு!:அப்பல்லோ டாக்டர்கள் தீவிர சிகிச்சை

Published:

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று மாலை, 6:00 மணி அளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடல்நிலை தொடர்பாக, கடுமையான வதந்திகள் பரவின. உடன், தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர். போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனர், ஜார்ஜ், கூடுதல் கமிஷனர்கள் சங்கர், ஸ்ரீதர், இணை கமிஷனர் மனோகரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் மருத்துவமனைக்கு வந்தனர்.

இதற்கிடையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு, புதிதாக சிகிச்சை பெற வந்த யாரையும், மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால், மருத்துவமனை வளாகத்தில் ஒரு பரபரப்பான சூழல் நிலவியது. அது, வதந்திகளுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, இரவு, 9:25 மணி அளவில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில், முதல்வருக்கு மாலையில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர்கள் அவரின் உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

முதல்வருக்கு, ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்படலாம், எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை சிகிச்சை அளித்து விட்டனர். இனி, கடவுளை வேண்டி கொள்வது தான் ஒரே வழி’ என, தெரிவித்தார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருகையைத் தொடர்ந்து, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும், இரவு மும்பையிலிருந்து அவசரமாக சென்னை புறப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். இதற்கிடையில், இரவு, 9:30 மணிக்கு மேல், அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை வெளிவந்த பிறகு, அ.தி.மு.க., தொண்டர்கள் திரளாக மருத்துவமனை பகுதியை சூழ்ந்தனர்.

அதனால், 10:30 மணிக்கு மேல், பதற்றமான சூழல் நிலவியது; மருத்துவமனை வாயில் மூடப்பட்டது. தொண்டர்கள், போலீஸ் மோதலில் லேசான தடியடி நடத்தப்பட்டது. இரவு முழுவதும் பரபரப்பு

தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின், துாத்துக்குடியில், நாளை நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். அதை ரத்து செய்து விட்டு, நேற்றிரவு அவசரமாக சென்னை திரும்பினார்

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன; போலீசார் அனைவரும், இரவே பணிக்கு வரவழைக்கப்பட்டனர்

அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் உள்ளிட்ட பெண் ஊழியர்கள், உடனடியாக வீடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள், பின்வாசல் வழியாக, வெளியேறினர்.

சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கு, நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் பங்கேற்காமல், அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து விட்டார்.

மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த கட்சியினர், இரவு, 10:00 மணியளவில், பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்

மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை தவிர, வேறு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

காங்கிரஸ் துணை தலைவர், ராகுலுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசரிடம், முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்திற்கு, முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

‘கடைகளை இன்று திறக்க வேண்டாம்’ என, வணிகர் சங்கங்களுக்கு, போலீசார் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

நேற்று இரவே, சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன.

முதல்வர் ஜெ., உடல்நிலை குறித்து, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரித்தார்.

சட்டம் – ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க, மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

தி.மு.க., தலைவர்களின் வீடுகளுக்கு நேற்று இரவு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

Related articles

Recent articles

spot_img