திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் 6ம் தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆகும்.
கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் அரசு ஒதுக்கிய ரூ.25 கோடியிலும், பக்தர்கள் நன்கொடையாலும் நடந்தன.
இதில் புதிதாக விநாயகர் சன்னதி, உற்சவர் சன்னதி, கோவிலில் மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் பிரகாரங்கள் விரிவாக்கப்பட்டு பரிவார விமானங்கள் மற்றும் மண்டபங்கள் புதுப்பித்து பஞ்சர்வணம் செய்யப்பட்டுள்ளன.
திருப்பணிகள் நிறைவடைந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர், கடைவீதி விநாயகர், சன்னதி வீதி விநாயகர், செல்லாண்டியம்மன், மாரியம்மன், கருப்பண்ணசுவாமி மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இதனையொட்டி வரும் 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் க.தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
கும்பாபிஷேக விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.