மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகள் குறித்து திருப்பூர் மாவட்ட பாஜக வினர் ரேஷன் கடைக்கு வரும் மக்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
மத்திய அரசு அறிவிப்பின்படி, கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் ஜன் தன் யோஜனா வங்கி கணக்கில் 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. உஜ்வலா திட்டத்தின் கீழ் பெற்ற இணைப்புகளுக்கு மூன்று மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படுகிறது
மாவட்ட அதிகாரிகள் இது குறித்து எந்தவித அறிவிப்பும் செய்யவில்லை என்பதால் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜகவினர் வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி படத்துடன் அரிசி மூட்டைகளில் கேஸ் சிலிண்டர் படத்துடன் சிறிய போஸ்டர் அடித்து நிவாரண உதவிகள் விவரத்துடன் மக்களின் பார்வைக்கு தெரியும் வகையில் ரேஷன் கடை அருகே ஒட்டி வைத்துள்ளனர்.
பாஜக நிர்வாகிகள் இது குறித்து தெரிவித்த போது, மத்திய அரசு வழங்கும் கூடுதல் அரிசி குறித்து மக்களுக்கு தகவல் எதுவும் தெரியவில்லை. அதிகாரிகளும் கூறவில்லை. வழக்கமான ரேஷன் பொருள்களுடன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏப்ரல் மாதம் வழங்கவில்லை. இம்மாதம் மட்டும் வழங்குகின்றனர்.
மக்களுக்கு விவரம் தெரிந்தால் மட்டுமே ரேஷன் கடையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அரிசியை கேட்டு பெற முடியும். அதற்காகவே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.