சென்னை:
அதிகாரப் போட்டி தலைதூக்கியுள்ள அதிமுகவில், நாளை மறுநாள் செப்.5ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, இன்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், தங்கள் பக்கம் 60 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்றும், 8 அமைச்சர்கள் உள்ளனர் என்றும் கூறியிருந்தார். அந்த அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்பதால், அவர்கள் பழனிச்சாமிக்கு ஆதரவாளர்கள் என்று பொருள் இல்லை என்று கூறினார் திவாகரன். எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ,க்கள் என்ற காரணத்தாலேயே எடப்பாடி பழனிச்சாமி கூட்டும் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.