நாகர்கோயில்:
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் துவங்கலாம் என உத்தரவிட்டுருப்பதை வரவேற்கிறேன். இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மத்திய அரசின் தரமான கல்வி கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியது:“ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 1986 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி என்ற இடத்தில் நவோதயா வித்யாலயா திட்டத்தை துவங்கியது. படிப்பில் திறமை வாய்ந்த பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு இலவசமாக தரமான கல்வியினை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாட்டை தவிர எல்லா மாநிலங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் நடைபெற்று வருகிறது.
இப்பள்ளிகளில் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வியுடன் உணவு, உடை, உறைவிடம், சீருடை, காலணிகள், மருத்துவம், எழுது பொருள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த வருடம் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் துவங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அப்போது நான் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அடுத்த முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்க அனுமதி வழங்க கேட்டேன்.
ஆனால் இன்றுவரை தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் துவங்கலாம் என உத்தரவிட்டுருப்பதை வரவேற்கிறேன். இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மத்திய அரசின் தரமான கல்வி கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது… என்று கூறினார்.



