சென்னை:
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் இன்று அதிரடியாக அறிவித்தார். இதை அடுத்து தமிழகத்தில் அடுத்தது என்ன நடக்கும் என அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் இது வரை நடந்து என்ன…?
முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் கடந்த மாதம் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்திருந்தனர்.
இதனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார்.
இதனால், கொறடா உத்தரவை மீறியது தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
அவர்கள் 18 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் அளித்திருந்த கெடு கடந்த வாரத்துடன் முடிவடைந்த நிலையில், தன்னிடம் நேரில் வந்து விளக்கம் அளிக்காத 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கட்சி மாறியது தொடர்பான சட்டத்தின் கீழ் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து குடகு சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




