சென்னை:
ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக., வேட்பாளர் அங்கீகாரப் படிவத்தில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என இருவர் கையெழுத்திட்டுள்ளனர். இது ஒரு விநோதம்தான்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக.,வின் சார்பில் அக்கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவருக்கு அதிமுக., சார்பில் வழங்கப்படும் அங்கீகாரப் படிவம் மற்றும் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் கோரும் படிவத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாறு இருவரும் கையெழுத்திட அனுமதிக்கக் கோரி நவ.30ல் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டு, டிச.1ல் தேர்தல் ஆணையமும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக இப்படி வேட்பாளர் அங்கீகாரப் படிவத்தில் இருவர் கையெழுத்திட்டுள்ளனர். இதுவரை ஒரு கட்சித் தலைவர் அல்லது பொதுச்செயலர் மட்டுமே வேட்பாளர் அங்கீகாரப் படிவத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர். அந்த மரபையும் மீறி சாதனை படைத்துள்ளனர் அதிமுக.,வின் இரட்டைக் குழல் துப்பாக்கியான இரட்டையர்!