சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்த காதலன், தன் காதலியை குத்திக் கொன்று, அவரது உடலை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்தான். ஆனால் உண்மை தெரிந்து காவலாளி கத்தவே தப்பிச் சென்றான். போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். சென்னையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலக காலனி பராக்கா சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் கண்ணப்பனின் மகன் தினேஷ் (25). இவர், அம்பத்தூரில் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த கண்ணப்பன், கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி உடனிருந்து அவரைக் கவனித்து வருகிறார். இதனால் தினேஷ் மட்டும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில் தினேஷ் போர்வை, மெத்தையால் சுற்றிக் கட்டப்பட்ட மூட்டை ஒன்றை லிஃப்ட் மூலம் இறக்கிக் கீழே கொண்டு வந்தார். அதனைத் தனது காரில் ஏற்ற முயற்சித்தார். ஆனால் அவரால், அந்த மூட்டையைக் காரில் ஏற்ற முடியவில்லை. இதனால் பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த காவலாளியை உதவிக்கு அழைத்தார். மருத்துவமனையில் உள்ள தனது தந்தைக்கு தேவைப்படும் மெத்தை உள்ளிட்டவற்றை மூட்டை கட்டியிருப்பதாக அவரிடம் தினேஷ் கூறியுள்ளார். அதை நம்பிய காவலாளியும் மூட்டையைத் தூக்க உதவி செய்துள்ளார். அப்போது அந்தத் துணி மூட்டையிலிருந்து ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு பயத்தில் கூச்சலிட்டுள்ளார் காவலாளி. அவரது கூச்சலால் அக்கம் பக்கத்தினர் அங்கே திரண்டனர். இதனால் பயந்துபோன தினேஷ் அங்கிருந்து நழுவி, ஒரு வாகனத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தார். இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்ததில், இளம்பெண்ணின் உடல் சுற்றி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே அவர்கள் இது குறித்து போலீஸாரிடம் தகவல் அளித்தனர். தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி விரைந்து சென்று அந்தப் பெண்ணின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணைக் கொலை செய்த தினேஷ் தப்பிச் சென்றுவிட்டதால், கொலையுண்ட பெண் குறித்து போலீசார் தகவல் தெரியாமல் குழம்பினர். இதனிடையே இரவு 11 மணி அளவில், சூளை சட்டண்ண நாயக்கர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், வேப்பேரி காவல் நிலையத்தில் தனது மகள் அருணாவைக் காணவில்லை என்று புகார் அளித்தார். அப்போது அங்கிருந்த போலீசார், தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலைய எல்லையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் உங்கள் மகள்தானா என்று போய்ப் பாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பதறியடித்துக் கொண்டு அருணாவின் பெற்றோரும் உறவினர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்து, இது தங்களது மகள்தான் என்று உறுதி செய்தனர். இதன் பின்னர் விசாரணை செய்த போலீஸார், தெரிவித்த தகவல்…. பி.காம் பட்டதாரியான அருணாவும், தினேசும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி தனிமையிலும் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் தினேஷ், நேற்று மாலை அருணாவுக்கு போன் செய்து, வீட்டில் யாரும் இல்லை. வா என்று அழைத்துள்ளார். அவரை நம்பி அருணா, வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டியில் புறப்பட்டுச் சென்றுள்ளார். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் அங்கே இருந்துள்ளனர். இரவில் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், அருணாவை அடித்து உதைத்து வீட்டில் இருந்த கண்ணாடி பூந்தொட்டியை உடைத்து சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் அருணா உயிரிழந்துள்ளார். அருணா உடலை வேறு எங்காவது போட்டு விட்டால் தப்பி விடலாம் என்று நினைத்த தினேஷ், அருணாவின் உடலை மூட்டையாகக் கட்டி காரில் கடத்த திட்டமிட்டார். ஆனால், போர்வைக்கு வெளியே நீட்டிக்கொண்டு தெரிந்த அருணாவின் கை, தினேஷைக் காட்டிக் கொடுத்து விட்டது. கொலையுண்ட அருணா பி.காம். முடித்து விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கணக்கு தணிக்கை பயிற்சி மையத்தில் ‘ஆடிட்டிங்’ பட்டய படிப்பு படித்து வந்தார். நேற்று காலை புறப்பட்டுச் சென்ற அவர் இரவு வெகுநேரம் ஆன பிறகும் வீடு திரும்பாததால், தேடிக் களைத்த அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்தே அருணா கொலை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது.
ஃப்ளாட்டில் காதலியைக் குத்திக் கொன்று உடலை மூட்டை கட்டி கடத்த முயற்சி: சென்னையில் அதிர்ச்சி
Published:

