சென்னை: ஜெயலலிதா மரணம் அடைந்து ஓராண்டு நிறைவதற்குள் சசிகலா குடும்பத்தில் மகாதேவன், சந்தானலட்சுமி என அடுத்தடுத்த மரணங்கள் நிகழ்ந்தன. சசிகலா குடும்பத்தில் நல்ல நிகழ்வுகளாக எதுவும் நடக்கவில்லை. ஒன்றரை வருடத்துக்குள் சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானது சசிகலா குடும்பத்தில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல் அவரது மரணம் வரை எல்லாமே மர்மம்தான். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குடைச்சல் கொடுக்க சசிகலா தரப்பு ஜெ.வுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலை வரவழைத்து அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து விளக்கமளிக்க வைத்தது. ஜெ.மரணத்தில் ஏற்கனவே ஏராளமான மர்மங்களும் குழப்பங்களும் நீடித்து வந்த நிலையில் மருத்துவர்கள் அளித்த விளக்கம் கூடுதல் குழப்பத்தையும் சந்தேகத்தையும் கிளப்பியது.
போதாக்குறைக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர், ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவேயில்லை,. பொய் சொல்லிட்டோம்.. ஐயா எங்கள மன்னிச்சுருங்கய்யா.. என்று கூறியதும், அதை ஒட்டி சிலர் அப்படியே ஆமாம் போட்டதும், மேலும் சில அனுமானங்களை மக்கள் மத்தியில் கிளப்பி விட்டது.
ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர், ஜெயலலிதாவின் ஆவி சசிகலா குடும்பத்தினரைத் துரத்துவதாக பரவலாகப் பேச்சு எழுந்தது. அண்மையில் மறைந்த சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் உயிரிழந்த விவகாரத்தைச் சொல்லி, இது பரவலாகப் பேசப்பட்டது.
அன்று மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவைப் பார்க்க வந்த அவரின் சொந்த அண்ணன் மகளை உள்ளேயே விடவில்லை! இன்று தனது சொந்த அண்ணன் மகன் இறப்புக்குக் கூட வந்து பார்க்க சிறைத்துறை விடவில்லை! வாழ்க்கை ஒரு வட்டம்! – இப்படி சமூக வலைத்தளங்களில் சசிகலா குறித்து செய்திகள் உலாவந்தன.
ஜெயலலிதா இறப்புக்குக் காரணம் சசிகலா குடும்பத்தினரே என குற்றச்சாட்டுகளை அதிமுக.,வினரும் சரி, பொதுமக்களும் சரி… பலரும் முன்வைத்தனர். ஏதோ, நிகழ்வுகளின் அடிப்படையிலான ஒரு எக்குத்தப்பான நம்பிக்கையாக இது இருந்தபோதும், அதை எல்லாம் ஒரு பொருட்டாக சசிகலா எடுத்துக் கொள்ளவில்லை. பன்னீர்செல்வத்தை ஆட்சியமைக்க வைத்த சில நாட்களில், தானே ஆட்சியில் அமர வேண்டும் என்று என்னவெல்லாமோ செய்தார். ஆனால் அது இயலவில்லை. கட்சி இரண்டானது. கட்சிக்கு கௌரவத்தைத் தந்த இரட்டை இலைச் சின்னமும் முடங்கிப் போய், பின்னர் அது எடப்பாடி, பன்னீர்செல்வம் குழுவுக்குச் சென்று விட்டது!
முதலமைச்சராகியே தீருவேன் என்று பன்னீர்செல்வத்தைத் தூக்கி அடித்தார். ஆனால், அவரைத் தூக்கி அடித்தது சொத்துக் குவிப்பு வழக்கில் வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இருப்பினும் ஜெயலலிதா சமாதி முன் நின்று, மீண்டு வருவேன் என்று சமாதியை அடித்து சத்தியம் செய்து கிளம்பினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் அப்படி எதுவும் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது!
இருப்பினும் ஆட்சியும், கட்சியும் தன் குடும்பத்தினரின் கையை விட்டுப் போய்விடக் கூடாது என்று குறியாக நின்றார். அதனால், ஜெயலலிதா ஒரு காலத்தில் கட்சியை விட்டுத் துரத்தி விட்ட தன் உறவினர் தினகரனை கட்சியில் து.பொ.செ. ஆக்கி, பின் ஜெயலலிதா நின்று வென்று, அவரது இறப்பால் காலியான அதே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் இறக்கினார். பண பலத்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைத்த இவர்களின் எண்ணம், முதலில் தவிடுபொடியானது. தேர்தல் தள்ளிப் போனது. பின்னர் ஒருவழியாக தினகரன் வென்று வந்தாலும், அதிமுக., என்ற கட்சியும் இரட்டை இலைச் சின்னமும் கைவசம் வராமல், புதிதாக கட்சியும் கொடியும் அமைக்கும் அளவுக்கு மாறிப்போனது.
இந்நிலையில் சசிகலா கணவர் எம்.நடராஜன், கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் காலம் தள்ளி அறுவை சிகிச்சை பெற்று, மரண அவஸ்தையை அனுபவித்து, இப்போது மரணத்தைத் தழுவியுள்ளார். மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது இயற்கையானது என்றாலும், சிரமங்களைச் சந்தித்து, மனக் கஷ்டங்களை அனுபவித்து மரணப் படுக்கையில் வீழ்வது என்பது எவருமே சற்றும் விரும்பாததுதான்!
இதன் பின்னர், சசிகலாவை மட்டுமின்றி, அவர் சார்ந்த ஊழலுக்குத் துணைநின்று ஊழல் செய்த கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களையும் வருமான வரித்துறை உருவில் ஜெயாவின் ஆவி துரத்துவதாக ஒரு பேச்சு எழுந்தது மேலும் பரபரப்பைக் கிளப்பியது.
மத்திய அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையும், அரசு ஆதரவு அற்று தொழில்களின் முடக்கமும் என்று, தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தமக்கும் தம் குடும்பத்துக்கும் எதிராக வருவதை அறிந்த சசிகலா குடும்பத்தினர் போயஸ் கார்டனை விட்டே வெளியேறிவிட்டனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்தே சசிகலாவின் உறவினர்கள் ரகசியமாக மந்திரவாதிகளை சந்திப்பதும், கோவில்களில் ரகசியமாக யாகங்களை நடத்தி வருவதாகவும் பரவலாகப் பேசப்பட்டது. துரத்தும் ஜெயலலிதா ஆவியின் கோபத்தைத் தணிக்க எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் இறங்கியுள்ளதாக பேசப் பட்டது.
இந்த பீதி, சசிகலாவின் அக்கா மகன் மகாதேவன் மரணத்துக்குப் பின் அதிகரித்தது. திருவாவடுதுறைக்கு வந்த வழியில், மகாதேவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஜெயலலிதாவால் ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்தே துரத்தியடிக்கப்பட்டவர் இந்த மகாதேவன். அவர் உயிரிழந்த விவகாரத்தை நினைத்து, சசிகலா குடும்பத்தினர் மிகவும் பயந்து போனதாகவே பேசப்பட்டது.
இவ்வாறு சசிகலா குடும்பத்தினர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களுக்கு அபசகுனமாகவே இருப்பதால், ஜெயலலிதா ஆவியின் பிடியில் இருந்து தப்ப என்ன செய்வது என்று அவர்கள் யோசித்ததாகவும், அதற்கான பரிகாரத்தை நோக்கிச் சென்றதாகவும் பரவலாக பேசப்பட்டது.
ஜெயலலிதா மரணத்தில் விளைந்த மர்மங்களும், அவர் கொடுத்த சாபமும், இறுதிச் சடங்கில் பின்பற்றப் பட்ட தகாத நடைமுறைகளும் சசிகலா குடும்பத்தார் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இதனால், ஜெ., ஆவி சசிகலா குடும்பத்தாரை சும்மா இருக்க விடாது என்று பொங்கும் சிலர், சமூக வலைத்தளங்களிலும் இதனையே எழுதி வந்தனர். இதனால், பொதுமக்களிடையே ஜெயலலிதா ஆவி குறித்த பேச்சு இப்போதும் வைரலாகப் பரவி வருகிறது.
முன்னர், ஜெயலலிதாவின் ஆவி பேசியதாக திருவாரூரை சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியிருப்பது நினைவுக்கு வரலாம்.
ஜெயலலிதாவின் ஆவி தன்னிடம் பேசியதாகவும், ஜெயாவின் ஆவி தன்னுள் இறங்கியிருப்பதாகவும் கூறி திகில் கிளப்பினார், திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்தார். அவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாகவும் அதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வேண்டும் என்றும் கூறி அனுமதி வேண்டினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் விசாரித்தனர். தன் கண்களை மூடியபடி ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாகக் கூறிஅ சாமியார் ஸ்ரீ மகரிஷி, அந்த ஆவி பேசுவது போலவும் பேசிக் காட்டினார். அப்போது அவர், ‘ நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன். ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அவர் என் அன்புக்கு பாத்தியமானவர். சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக் கூடாது.. என்றெல்லாம் பேசி திகில் ஊட்டினார்.
தாம் கேரளத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்ட சாமியார், ஜெயலலிதா ஆவி கிட்டத்தட்ட 30 பேரை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அதுவும் ஒரு தனியார் தொலைக்காட்சியில்!
ஆனால், பகுத்தறிவுக்கு ஒவ்வாத பேய், பூதம், ஆவி இவை எல்லாம் பொய் என்று கூறப்பட்டாலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் பரபரப்பை ஏற்படுத்திதான் வருகிறது.
இன்றும், சசிகலா, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சில தகவல்களைக் கூறியிருக்கிறார். ஆனால், அவை முன்னுக்குப் பின் முரணாகப் பார்க்கப் படுகின்றன.
ஆவி வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம், ஆனால் ஆவியால் துரத்தப்பட்டு ஏற்படுவதாகக் கூறப்படும் மரணங்களும் ஆவி குறித்த மக்களின் நம்பிக்கையும் இன்றும் உண்மையாகவே இருக்கின்றனவே!