
சென்னை: சீருடையில் பணியில் இருந்த காவலர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் குறித்து போலீஸில் தொடர்புடைய காவலர் புகார் அளித்தார். இந்நிலையில், சீமானை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை முயற்சி வழக்கில் கைது செய்யும் நோக்கோடு மிக அதிக அளவிலான சிறப்பு அதிரடிப்படையினர் காவல்துறையினர் சீமான் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சென்னையில் காவிரிக்காக போராட்டம் நடத்திய தலைவர்களை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. #CauveryIssue #CauveryProtest #CauveryManagementBoard #TNFight4Cauvery
முன்னதாக, நேற்று முன் தினம் நடைபெற்ற போராட்டத்தில், சீமான் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. ஆனால் அவர் இந்த வழக்குகளில் கைது செய்யப் படவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும் கறுப்புக் கொடிப் போராட்டம் என்று வந்து, போலீஸாரால் தடுக்கப் பட்டு மண்டபத்தில் வைக்கப் பட்ட நிலையில், அவரை முந்தைய வழக்குகளில் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பின. சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் தொடங்கும் முன் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
சுமார் 750-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட போராட்டக்காரர்கள், கிரிக்கெட் ரசிகர்களையும் போலீஸாரையும் தாக்கியுள்ளனர். போலீஸாரைத் தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. காவலர்கள் தாக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், காவலர்களைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து, நாம் தமிழர் கட்யைச் சேர்ந்த சுமார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, ”ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையில் போராட்டம் நடந்தது. அதில், சென்னை சங்கர்நகரைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் மற்றும் ஆயுதப்படை காவலர் ஜெயசந்திரன் ஆகியோர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். இதில் அவரது உதடுகள் கிழிந்தன.
செந்தில்குமார், கொடுத்த புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப் பட்டனர். அதில் சீமான் மீது 47, 148, 341, 294 பி (பொது இடங்களில் தகாத வார்த்தைகளால் பேசுதல்), 324, 332, 336 (சட்டவிரோதமாக கூடுதல்), 353 (ஆயுதங்களால் தாக்குதல்), 307 (கொலை முயற்சி), 506 (11) (கொலை மிரட்டல்) ஆகிய 10 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செந்தில் குமாரைத் தாக்கியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் மீது தடையை மீறி சென்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர் ஜெயசந்திரன் கொடுத்த புகாரில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்களையும் தேடி வருகிறோம். இது தவிர ஊர்வலத்தில் தடையை மீறிச் சென்றதாக போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் 500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார்.
இந்நிலையில் சென்னையில் இன்று பிரதமருக்கு எதிராக போராட்டம் மற்றும் கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்எல்ஏக்கள் உட்பட 3,070 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனூடே சீமானை முந்தைய ஜாமீனில் வெளிவர இயலாத வழக்குகளில் கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



