மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மூன்றாம் கட்ட விசாரணைக்கு மேல் நீடிக்கும் திட்டமில்லை என்று ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம் கூறியுள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், மூன்றாம் கட்ட விசாரணைக்கு மேல் நீட்டிக்கும் திட்டமில்லை என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, இதனைத் தெரிவித்தார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப் பட்டு விசாரணையில் இருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனிடம் தாம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறிய சந்தானம், தமக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டத்தை நோக்கி விசாரணை நகர்வதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், ஏற்கெனவே கால நீட்டிப்பு பெற்று அவகாசம் பெற்றுள்ளதால், அதற்கு மேலும் விசாரணையை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார் அவர்.


