அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி, கிரி பிராகாரத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் மோர் விற்றுக் கொண்டிந்த ஒரு பெண் பலியானார். பிராகாரத்தில் நடந்து சென்ற இரண்டு பக்தர்கள் காயமடைந்தனர். இதனால், கிரிப்பிராகாரத்தில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்துடன், தங்கத்தேர் உலாவும் நிறுத்தப்பட்டது.
கிரி பிராகார மண்டபம் முழுமையாக அகற்றப்பட்ட பிறகும், தங்கத் தேர் ஓடவில்லை. இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.
இதனிடையே வைகாசி வசந்த திருவிழா கடந்த மே 19 ஆம் தேதி தொடங்கியது. இதனை அடுத்து வசந்தத் திருவிழாவின் இரண்டாவது நாளான மே 20லிருந்து தங்கத் தேர் ஓடும் என இணை ஆணையர் பாரதி அறிவித்தார்.
அதன் பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் இரவு 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையோடு எழுந்தருளினார். ”கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா..” என கோஷத்துடன் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.
சுமார் 6 மாத காலத்திற்கு பிறகு தங்கத் தேர் ஓடியது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




