திருச்சி: திருச்சியில் உள்ள புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை மிதித்து பாகன் உயிரிழந்ததால், பரிகார பூஜைகள் செய்யப் பட்டு, ஒரு நாள் கழிந்து நடை இன்று காலை மீண்டும் திறக்கப் பட்டது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மசினி, வெள்ளிக் கிழமை நேற்று காலை அதன் பாகனை ஆலய வளாகத்திலேயே மிதித்துக் கொன்றதையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டது. கோயிலில் பாகன் உயிரிழந்ததால் கோயில் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள அஷ்ட திக்குகளிலும் பலி இடப்பட்டு, பரிகார பூஜைகள் மேற்கொள்ளப் பட்டன. இன்று அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 10 மணியளவில் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
நேற்று ஒரு துர் மரணம் நிகழ்ந்ததாலும், இன்று சனிக்கிழமை என்பதாலும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது.