தமிழகத்தில் பாஜக., எங்கே இருக்கிறது என்று கேள்வி கேட்டவர்களுக்காக இங்கே சில படங்கள் என்றும், நன்றி தமிழகம் என்றும் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் அமித் ஷா ஆவேசமாகப் பேசினார். அப்போது அவர், தமிழகத்துக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி வழங்கியது மோடி அரசு, காங்கிரஸ் அரசு குறைந்த நிதியே வழங்கியது என்று பேசினார்.
நன்றி தமிழகம் pic.twitter.com/1EPyOi9pcj
— Amit Shah (@AmitShah) July 9, 2018
தமிழகத்தில் பாஜக., நிச்சயம் ஆட்சி அமைக்கும். இதற்கு தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் ஒரு மகத்துவமான நாள்தான். நான் தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். பாருங்கள்… 2019 மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தில் பாஜக., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள்.
தமிழகத்தின் முதுமொழி, வள்ளுவரின் வாய்மொழி. வரும் விருந்தினரை விருந்தோம்பி, அவர்களுக்காகக் காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு என்று வள்ளுவர் தம் வாய்மொழியில் சொன்னார். ஆனால் எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வள்ளுவர் வாக்கை நன்கு அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு நான் இரு கரம் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவிக்கிறேன்… என்றார்.
அண்மையில் பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது, கோ பேக் மோடி என்ற வாசகத்தை இட்டு, டிவிட்டரில் அதனை பிரபலப் படுத்தி, கருப்புக் கொடி காட்டி, மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் மோடி சென்னைக்கு வந்து, ஆயுதத் தொழிற்சாலை வேலைவாய்ப்பு என தமிழகத்துக்கு நன்மை செய்து விட்டு திரும்பினார். அதுபோல், அமித் ஷாவின் இன்றைய வருகையை முன்னிட்டு, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோ பேக் அமித் ஷா என்ற டிவிட்டர் பதிவிட்டு அதனை டிரெண்டிங் ஆக்கினர். இதனால் சற்றே கடுப்பான அமித் ஷா, இவ்வாறு பேசியிருப்பதாக பாஜக,.வினர் தெரிவித்தனர்.
மேலும், இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன்
உலகின் மிகப் பெரிய கட்சியாக பாஜக, உள்ளது. மோடி அரசின் மக்கள் சேவையால் பாஜக., மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடியின் பாஜக., அரசு செய்திருக்கிறது.
இதற்கு முன்பு ஆட்சி செய்த அரசுகளை விட மோடி அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீர்ப் பாசன திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இதுவரை தமிழகத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில், 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
முந்தைய ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. ஆனால், ஊழல், சாதீயவாதம், வாரிசு அரசியல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வந்தது மோடி அரசு. மோடி ஆட்சியில் எதிர்ப்பாளர்களால்கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது.
ஊழல் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வர பாஜக., உறுதியேற்கும் என்று பேசினார் அமித் ஷா.