தேனி அருகே கோடாங்கிபட்டி கண்மாயில் இருந்து பழநிசெட்டிபட்டி பகுதி விவசாய பாசனத்திற்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில் தேனி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டம் பழநிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கே.கலையரசன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு :
கோடாங்கிபட்டி கண்மாயில் இருந்து பழநிசெட்டிபட்டி கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று நீதிபதிகள் M.M.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர்,பொதுபணித்துறையின் நீர் ஆதாரம் செயற்பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.




