சென்னைவாசிகளே … அடுத்த 10 நாட்களுக்கு கவனமா இருங்க… இடி மழைதான்: தமிழ்நாடு வெதர்மேன்!

Published:

rain rain - 2026

தமிழகம் முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று அவரின் முகநூலில் பதிவிட்டு இருப்பதாவது:

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பருவமழை இல்லாத பகுதிகளிலும், அடுத்த10 நாட்களில் இந்த மழை இருக்கும். கடந்த வாரத்தில் அதிகமான மழை மேற்கு தமிழகத்திலேயே பெய்துவிட்டது.

இப்போது சிறிய இடைவெளிக்குப்பின், கிழக்குப் பகுதியில் மழை தனது பணியை செய்ய இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு, அதாவது நாள்தோறும் கூட தமிழகத்திலும், சென்னையிலும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

வடசென்னையில் இன்று இரவுகூட மழை இருக்கும். இன்று இரவு தென்சென்னை புறகர் பகுதிகளில் காஞ்சிபுரத்தில் இருந்து நகர்ந்து வரும் மேகக்கூட்டங்களால் மழைபெய்ய வாய்ப்புண்டு.

ஒருவேளை இன்று இரவு மழை பெய்யாவிட்டாலும் கூட, அடுத்த 10 நாட்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். ஆனால், வெள்ளம் வருவதுபோல் மழை பெய்யாது. சென்னையில் இதுபோன்ற மழையால் வெள்ளமும் வராது. செங்கல்பட்டில் நேற்று 50மிமி மழை பெய்தது, இன்றும் மழை பெய்யக்கூடும்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பெங்களூரிலும் அடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் நகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், வெள்ளம் வரும் அளவுக்கு கனமழை இருக்காது.

கேரளாவைப் பொறுத்தவரை மழை தற்போது அங்கு இடைவெளி கொடுத்துள்ளது. ஆனால், சில நேரங்களில், ஒருசில இடங்களில் மழை பெய்யக் கூடும். ஆனால், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவுக்கு மிக கனமழை இருக்காது.

இவ்வாறு பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img