சென்னை: தமிழகத்தில் இ-சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து ஏற்கெனவே தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ-சிகரெட் எனும் எலக்ட்ரானிக் சிகரெட் தடை செய்வதாக கடந்த ஜூன் 14-ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இ-சிகரெட்டில் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கொண்டிருப்பதாகவும், தீவிரமான நுரையீரல் பிரச்னை, கர்ப்பிணிக்கும் சிசுவுக்கும் கேடு விளைவிக்கும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இ-சிகரெட் தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல், கல்வி, சுகாதாரத்துறைகளைச் சேர்ந்த 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போதைப்பொருள் கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீடி, சிகரெட்டுக்கு இணையாகவோ, அதைவிட அதிகமாகவோ அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும்இ-சிகரெட்கள் மற்றும் அதனைப் போன்ற சிகரெட்களின் உற்பத்தி, விற்பனை, விநியோகம், இறக்குமதி, பயன்பாடு, காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு தமிழகத்தில் தடை விதிப்பதாக அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.




