தமிழகம் எதிர்பார்த்த பதில்..! ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வீடியோக்கள் அழிந்து விட்டன!

Published:

apollo reddy - 2026

சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த வீடியோக்கள் அழிந்து விட்டன என்று பதில் கூறி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த பதிலைத்தான் தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டது. ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை தமிழக அரசே நியமித்தது.

இதை அடுத்து கடந்த ஒரு வருடமாக இந்த விசாரணை ஆணயம், பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வந்தது.

நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ செவிலியர்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர், சசிகலா குடும்பத்தினர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் வழக்குரைஞர் ராஜா செந்தூர் பாண்டியன் சாட்சியம் அளித்தும் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார்.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சில ஆவணங்களை தாக்கல் செய்தது.  இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது இல்லை என்றும் தெரிவித்தது அப்பல்லோ நிர்வாகம். இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு வீடியோவை ஒப்படைக்குமாறு விசாரணை ஆணையம் உத்தரவிட்டது.

மேலும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் விசாரணை கமிஷனுக்கு கடிதம் வாயிலாக பதில் அளித்துள்ளது.

அந்தக் கடிதத்தில்,  ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டன என்று கூறியுள்ளது.  மேலும் அந்தக் கடிதத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் சேமிக்க முடியாது. புதிதாக பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாகவே அழிந்து விடும். எனவே வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

இதைத் தொடர்ந்து சி.சி.டி.வி. பதிவு சர்வரை நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் பழைய பதிவுகள் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் விஐபி.,கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பதில்லை என்று அப்பல்லோ நிர்வாகம் கூறியது தொடர்பாகவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img