கோவில்பட்டி அருகேயுள்ள வடக்குதிட்டங்குளத்தினை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் ஜோதிரமேஷ்(25). கூலி தொழில் செய்து வரும் ஜோதிரமேஷ் என்பவர் இன்று காலையில் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகம் அருகேயுள்ள காவல்துறைக்கு சொந்தமான 100 அடி உயரமுள்ள வயர்லெஸ் டவரில் ஏறி தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
தன்னுடைய பள்ளி சான்றிதழ் காணவில்லை என்றும், அதனை மீட்டும் தரவேண்டும் என்றும், அதுவரை கீழே இறங்க போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கோவில்பட்டி தாசில்தார் பரமசிவம், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பேசி நைசாக கீழே இறங்க வைத்தார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜோதிரமேஷ் கீழே இறங்கினார். அவரை போலீசார் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோதிரமேஸ் மீது வழிப்பறி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஜோதிரமேஷ் டவரில் ஏறி போராட்டம் நடத்துவது இது 3வது முறை என்பது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.



