சென்னை: திமுக., தேர்தலில் தனித்து நின்றால், அதிமுக.,வும் தனித்துப் போட்டியிடும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ்., கூறினார்.
முன்னதாக, பாஜக., அரசின் பிடிக்குள் அதிமுக., சிக்கிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டிற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, நாங்கள் யாரிடமும் சிக்கிக் கொள்ளவில்லை. தேவையான நிதியை போராடி பெற்று வருகிறோம். மத்திய அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்தவர் இருந்தும் தேவையான நிதியைப் பெற்றுத் தரவில்லை என்றார்.
அப்போது, அமைச்சர் தங்கமணி பதிலுக்கு, காங்கிரஸ் ஆட்சியில் திமுக.,வை மிரட்டி கூட்டணியில் சேர்த்ததாக குற்றம் சாட்டினார்.
அதற்கு குறுக்கிட்ட ஸ்டாலின், குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் வீடு, தலைமை செயலகத்தில் ரெய்டு நடந்தது நினைவில்லையா என கேள்வி எழுப்பினார்.
பின்னர் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தேர்தலுக்கு பயந்தது திமுகதான்; அதிமுக அல்ல. தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. திருவாரூர் தேர்தலை தள்ளி வைக்க திமுக மனு அளித்தது ஏன். திருப்பரங்குன்றம் தேர்தலை நிறுத்தியதும் திமுக தான் என்று குற்றம் சாட்டினார்..
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், அனைவரும் தனித்து நின்றால், தேர்தலில் அதிமுகவும் தனித்து போட்டியிட தயார் என்று பேசினார்.. இப்படி, கூட்டணி, தனித்து நின்றுபோட்டி என்று அவையில் சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது.