நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அரங்கம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏற்கெனவே அதிமுக., திமுக., தலைமையில் இரு அணிகள் முடிவாகியுள்ள நிலையில், மூன்றாவது அணி அமையும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் முதலாம் ஆண்டு நிறைவு, மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக காலையில் சென்னை ஆழ்வார்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றி வைத்தார் கமல்ஹாசன். பின்னர் இன்று மாலை திருவாரூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆர்வம் காட்டவில்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட கட்சி இன்னும் தயாராக வில்லை என்றும் கூறப்படுவது குறித்து கமல்ஹாசனிடம் கேட்கப் பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், புது முகங்கள், இளைஞர்களை தேர்தலில் போட்டியிட வைக்கப் போவதாகவும், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி வரும் 24ம் தேதி தொடங்கப்படும் என்றும் கூறினார்.
வேட்பாளர்கள் தேர்வில் வயது, கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறிய கமல்ஹாசன், இளைஞர்களுக்கே முதல் மரியாதை என்றார்.
தமிழகத்தில் இரு பெரும் மெகா கூட்டணிகள் அமைவது குறித்து கேள்வி எழுப்பியபோது, மெகா கூட்டணி எது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
மேலும், தமிழகத்தில் 3வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்,. எனவே, திமுக., அதிமுக,. கூட்டணியில் இடம் இல்லாத சில சிறு கட்சிகள் சேர்ந்து மூன்றாவது அணி அமையும் வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. இன்னமும் தேர்தல் தேதி அறிவிக்கப் படவில்லை என்பதால், அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்றனர் மக்கள் நீதி மய்யத்தினர்.




