பாமக – அதிமுக கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை; துரைமுருகன் என்னிடம் பேசியதை நான் சொல்லட்டுமா? துரைமுருகன் அவரின் கட்சியை பற்றி பேசியதை சொல்லட்டுமா? துரைமுருகன் அவரின் தலைமை குறித்து பேசியதை சொல்லட்டுமா என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது கேள்வி எழுப்பினார்.
திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக முக்கிய நிர்வாகிகள் சந்தித்தது குறித்து தேமுதிக துணை தலைவர் சுதீஷ் கூறியதாவது:-
அனகை முருகேசனும், இளங்கோவனும் தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்திக்க சென்றனர். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த நானும், துரைமுருகனும் பலமுறை சந்தித்து அரசியல் தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி உள்ளோம்.
உள்ளே பேசுவதை வெளியே சொல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. துரைமுருகன் என்னவெல்லாம் பேசினார் என்பதை நான் கூறட்டுமா? திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் என்னிடம் நிறைய பேசி உள்ளார்.
பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது எங்களுடைய தொகுதி பங்கீட்டை உறுதி செய்திருக்கலாம் என்பது எங்கள் வருத்தம். அ.தி.மு.க உடன் கூட்டணி முடிவாகி விட்டது. இரண்டொரு நாளில் வெளியிடப்படும் என்றார்.
முன்னதாக, துரைமுருகன் தேமுதிகவினர் ஏற்கனவே நொந்து போயுள்ளனர் , மேலும் அவர்களை புண்படுத்த விரும்பவில்லை என்று கூறினார்.
தேமுதிக நிர்வாகிகளைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்என்று கூறிய திமுக பொருளாளர் துரைமுருகன், தனிப்பட்ட முறையில் பேச என்னிடம் எதுவும் இல்லை! அனகாபத்தூர் முருகேசன் யார் என்றே தெரியாது! என்றார்.
சுதீஷ் கூறியவை குறித்துப் பேசிய துரைமுருகன், சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டு விட்டார்! தேமுதிக நிர்வாகிகளை நான் முன்பின் பார்த்தது கூட கிடையாது! மாறி மாறி பேசி வருகிறார்கள் தேமுதிக நிர்வாகிகள்!
என்னிடம் பேச வந்தபோது என்னுடைய நிலையை சொன்னேன்! தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே! மறுபடியும் அதிமுகவிடம் பேசுவதற்காக எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள்!
தேமுதிக ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை என்று முத்தாய்ப்பாக முடித்தார் துரைமுருகன்!