தேர்தல் ஆணையத்தின் விசாரணைப் பிடியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் சிக்கியிருக்கிறார்! திமுக.,வினரிடம் பிடிபட்ட புத்தம்புதிய வாக்காளர் அட்டைகள் அதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களாக திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுக.,வில் இருந்து ஜெயவர்தனனும் போட்டியிடுகின்றனர். தீவிர ஓட்டு வேட்டையில் இரு தரப்பும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மேடவாக்கம் – ஆதம்பாக்கம் பகுதியில் வழக்கம் போல் தேர்தல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அதிகாரிகள். அப்போது அவழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது, காரில் கட்டுக்கட்டாக தென் சென்னை பகுதியின் புத்தம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, 220 வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவற்றை எடுத்து வந்தவர்கள் திமுக.,வைச் சேர்ந்தவர்கள் என்றும், திமுக வட்டச் செயலாளர் திவாகரன் அவர்களில் ஒருவர் என்றும் அதிகாரிகளால் உறுதி செய்யப் பட்டது.
இதை அடுத்து, அவர்களைக் கைது செய்த அதிகாரிகள், இந்த அடையாள அட்டைகள் எவ்வாறு கிடைத்தன என்றும், கள்ள ஓட்டு போட இதனை அவர்கள் பயன்படுத்த இருந்தார்களா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது போன்று கடந்த வருடம் கர்நாடகாவில் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப் பட்டதால் ஒரு தொகுதியில் தேர்தலே ரத்தானது. அது போல், தென் சென்னை தேர்தலும் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன் வேலூரில் வருமான வரித்துறையினர் திமுக., பொருளாளர் துரை முருகனுக்குச் சொந்தமான கல்லூரி, மற்றும் திமுக.,வினரின் வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றியதால், வேலூரிலும் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் தென்சென்னையும் கட்டம் கட்டப் பட்டுள்ளதால், திமுக.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.