
முதல்வர் விஜய் அவர்களுக்கு….
ஒரு கணக்கியல்:
நீங்கள் தந்த வாக்குறுதிகளின் அடிப்படையில். ஒவ்வொரு ஆண்டின் நிதிச்சுமையின் அளவு (தோராயமாக):
1) வருடத்திற்கு 6 இலவச எரிவாயு உருளைகள் – 12,000 கோடி.
2) மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் – 14,000 கோடி.
3) பெண்களுக்கு மாதம் 2500, வேலை இல்லாத பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா இளைஞர்களுக்கு உதவி – 27,000 கோடி.
4) இலவச பேருந்து, 8 கிராம தங்கம், விரிவான மருத்துவ காப்பீடு, சுய உதவிக் குழுக்களின் வட்டி மானியம் மற்றும் தள்ளுபடி ,பள்ளி ஊக்கத்தொகை (school incentive), கூடுதல் அரசாங்க வேலைகள் உருவாக்கம், இதர – 65,000 கோடி.
ஆக கூடுதல் நிதிச்சுமை – 1,20,000 கோடி..
தற்போது இருக்கும் மொத்த நிதிச்சுமை (நிலுவையில் இருக்கும் 9,40,000 கோடி கடனின் வருடாந்திர 68,000 கோடி வட்டி , அரசாங்க ஊழியர்கள் சம்பளம், மற்றும் எல்லா செலவுகளும் உட்பட)- 4,50,000 கோடி.
மொத்த வருடாந்திர செலவு – 1,20,000 + 4,50,000 = 5,75,000 கோடி.
ஓராண்டு தமிழ்நாட்டின் நிதி வரவு- 3,75,000 கோடி.
ஓராண்டின் நிதிபற்றாக்குறை – 2 லட்சம் கோடி!
ஐந்து ஆண்டுகளுக்கு 10 லட்சம் கோடி!
2026 இல் பதவி ஏற்கும்போது இருந்த நிதிச்சுமையையும் கூட்டினால் 2031 மே மாத முடிவில் நாம் எதிர்பார்க்கும் நிலுவைக் கடன் – 19 லட்சம் கோடி!
தமிழ்நாடு தப்பித்து வரக்காரணம் தொழில்முறை வர்த்தக வருமானம் மற்றும் துரிதமான வரி வசூல்.. ஆனால் இது எதையும் எவ்வளவு அதிகப்படுத்தினாலும் 20 லட்சம் கோடி நிதிச்சுமையை எல்லாம் யாராலும் சமாளிக்க முடியாது.
விளைவு?
1) மது வருமானத்தை அதிகரிக்க வேண்டி வரும் – நான் இன்று மருத்துவம் செய்யும் 10 நோயாளிகளில் குறைந்தது 7 ஆண்கள் அன்றாடம் குடிப்பவர்கள்..
2) போக்குவரத்துக் கழகம், TANGEDCO – இரண்டுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு icu வில் போய் படுத்துக்கொள்ளும்..பிறகு TANGEDCO விற்கு oxygen தருவதற்கே மின்சாரம் கிடைக்காது..
உங்களால் பழைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் நிதிச்சுமைக்கு காரணமாக பழிக்க முடியாது..ஏனென்றால் அவர்கள் தயவில்தான் இன்று உங்களுக்கு சிம்மாசனமே..
ஆகையினால் திரு விஜய் அவர்களே…இதைப் புரிந்து கொள்ளுங்கள்..
1) நீங்கள் ஏதோ ஒரு வேகத்தில் இலவசங்களை அறிவித்து விட்டீர்கள்..ஒன்பது கோள்களையும் விற்றால்கூட இவை எல்லாவற்றையும் நிறைவேற்ற முடியாது.
2) உங்களுக்கு எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பவர்களின் “எதிர்க்கட்சி” திறமையை நீங்கள் அறிந்திருக்க வாய்பில்லை..உங்கள் ஒவ்வொரு அடியையும் இனி பிரித்து மேய்வார்கள்..அவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்..
3) மாறாக “வாக்குறுதிகளை நிறைவேற்றாமலேயே வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது” என்ற ஒரு புத்தகம் கடந்த 5 ஆண்டுகளில் வெளி வந்துள்ளது..அதை வாங்கி படியுங்கள்.
4) இல்லையென்றால் மக்களிடம் இந்த நிறைவேற்ற முடியாத வாக்குகளுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு ஒரு சுமார் ஆட்சியையாவது தாருங்கள்.
தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!
- டாக்டர் ராஜேஷ் ஜெயராமன்



