கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா தோகைமலை அருகே தாசில்நாயக்கனூர் ரெங்கசாமி (எ) கஞ்சாநாயக்கர் (50) என்பவர் தடைசெய்யப்பட்ட மண்ணுளி பாம்பு வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்த வியாபாரத்தில் பொருந்தலூர் கண்ணவிடல்நாயக்கர்பட்டியை சேர்ந்த தங்கவேல், அப்பகுதியை சேர்ந்த ராஜா ஆகிய இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லம்பகுதியை சேர்ந்த முகமது ரபிக் (23), விவேக் (22), நிம்மின், நித்தீஸ் இவர்கள் சகோதரர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட மண்ணுளி பாம்பை வாங்கினால் பணக்காரன் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் புரோக்கர்களை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தடைசெய்யப்பட்ட மண்ணுளி பாம்பு விற்பனைக்கு புரோக்கர்கள் கண்ணல் விடநாயக்கன் பட்டி தங்கவேல் நாடி உள்ளனர்.
அப்போது அவரும் தருவதாக கூறி விலையும் பேசியுள்ளார். இதை நம்பிய கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு பேரும் தடைசெய்யப்பட்ட மண்ணுளி பாம்பை வாங்குவதற்கு கொல்லத்திலிருந்து கார் மூலம் நேற்று சின்னயம்பாளையத்திற்கு வந்துள்ளனர்
அப்போது அவர்களிடம் புரோக்கர் தங்கவேல் மற்றும் ராஜா ஆகியோர் கேரள நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது தங்கவேல் திடீரென மண்ணுளி பாம்பு இல்லையென கூறியுள்ளார் அப்படியென்றால் நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தாருங்கள் என்று கூறியுள்ளனர். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கைகலப்பானது.
இதனால் தங்கவேல் மற்றும் ராஜா சம்பவ இடத்திலிருந்து தப்பி யோடியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது ரபிக், தான் வைத்திருந்த பிஸ்டல் ரக துப்பாக்கியால் இருவரையும் நோக்கி சுட்டுள்ளார்.
இதில் தங்கவேல் வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்ததில் அவர் பலத்த காயமடைந்ததால் நண்பர்கள் மூலம் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி சுகுமார் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மற்றும் போலீஸார் விரைந்து சென்று கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ரபிக், விவேக், நிம்மின், நித்தீஸ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இதில் கார் டிரைவர் பாலக்காட்டை சேர்ந்த சுபாஸ் தப்பியோடிவிட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்
இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் பொழுது கேரள இளைஞர்கள் துப்பாக்கி வைத்திருந்தது போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




