
70 வயது முதியவரிடம் திருமண ஆசை காட்டி 4 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் திருமண புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலையை அடுத்துள்ள மருக்காலாங்குளம் பகுதியை சேர்ந்தவா் தங்கப்பாண்டியன்(68) இவரது மனைவி அழகாத்தாள் தம்பதிக்கு அந்தோணிராஜ், முத்துபாண்டியன் என இரு மகன்கள்.இருந்துள்ளனா்.
அதில் அந்தோணிராஜ் என்பவர் திருமணம் ஆகாமலே இறந்துவிட்டார். இதேபோல் மற்றொரு மகனான முத்துபாண்டியன் ராணுவத்தில் பணியாற்றி விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது மனைவிக்கு மத்திய அரசு பணி கிடைக்கப்பெற்றதால் தனது இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்தாண்டு அழகாத்தாள் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இதனால் மருக்காலாங்குளத்தில் தங்கபாண்டியன் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தங்கபாண்டியனின் வீட்டிற்கு 30 வயது மதிக்கதக்க இளம்பெண்ணும் திருமண புரேக்கர் ஒருவரும் வந்துள்ளனர்.
இளம்பெண்ணுடன் வந்த புரோக்கர் அந்த பெண்ணின் பெயர் ஜெயந்தி என்றும் அவள் தாய், தந்தை இல்லாத அனாதை என்றும், அவள் கீழசுரண்டையில் உள்ள தையல் கடையில் வேலைபார்த்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், இளம்பெண்ணை தாங்கள் திருமணம் செய்துகொண்டால் கடைசி காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய தங்கபாண்டியன் ஜெயந்தியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என கேட்டுள்ளார் அதற்கு அந்த பெண் ஜெயந்தி சம்மதம் தெரிவித்துள்ளார் இருவரும் தனிமையில் பேசிட வைத்த திருமண புரோக்கர் வீட்டை நோட்டமிட்டுள்ளார்.
அப்போது மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கப்பாண்டியன் மனைவியின் 3 பவுன் நகைகளை திருடி தனது கைப்பையில் வைத்துகொண்டார்.
மேலும் உடனே கோயிலில் திருமணம் செய்வதற்கான தாலிச் சங்கிலி வாங்கவேண்டும் எனக்கூறினார். அதன்பேரில் சுரண்டையில் உள்ள நகைகடைக்கு ஒரே பைக்கில் 3 பேரும் சென்றனர்.
அப்போது அந்த இளம்பெண்ணுக்கு தாலி மற்றும் மூக்குத்தி என ஒரு பவுனுக்கு தங்க நகைகளை தங்கபாண்டியன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர் அதே பைக்கில் மூவரும் கீழ சுரண்டைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வரும் வழியில் ஆடை மாற்றிவரும் வரை பஸ் நிறுத்தம் பகுதியில் காத்திருக்குமாறு கூறிச்சென்றனர்.
இதனையடுத்து நீண்ட நேரமாக காத்திருந்த தங்கபாண்டியன் புரோக்கரும் இளம்பெண்ணும் திரும்பாததால் நகை பறிபோனது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுரண்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை அபகரித்து சென்ற இளம்பெண்ணையும், புரோக்கரையும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாகக் கூறி மர்மநபர் 5 பவுன் நகையை அபகரித்து சென்றார். அதன்சுவடு மறைவதற்குள் தற்போது நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


