குன்னூரில் தேயிலை தோட்டத்தில் 4 மணி நேரம் உயிருக்கு போராடிய கரடி வனத்துறை சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால், பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உபதலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் 3 கரடிகள் நடமாடி வந்தது. இந்தப் பகுதியில் விவசாய நிலங்களும், பழங்களும் அதிகளவில் உள்ளதால் அவ்வப்போது இந்த பகுதிக்கு வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் நடமாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு செல்ல தொழிலாளர்கள் செல்லும் போது, 6 வயதுடைய பெண் கரடி ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அளித்தும் காலதாமதமாக வந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவருக்காக காலதாமதம் செய்ததால் 4 மணி நேரம் கரடி உயிருக்கு போராடி வந்தது.
தொடர்ந்து கரடியை மீட்டு சிகிச்சை அளிக்காததால், பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், வாயில் நுரையுடன் உயிரிழந்ததால், கரடிக்கு அருகில் உள்ள விவசாயம் நிலங்களில் விசம் வைத்ததார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும், 3 கரடிகளில் ஒன்று உயிரிழந்த நிலையில், மீண்டும் இரு கரடிகள் அதே பகுதியில் உலா வருவதால், அந்த கரடிகளையும் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.