செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா களை கட்டி வருகிறது. நாளை ஜூன் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருமலைக்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இலவசமாக பக்தர்களை அழைத்துச் செல்ல வேன்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. இதனை தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆய்வு செய்தார்.
திருமலைக்கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்படும் என்று ஏற்கெனவே போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. தென்காசி, செங்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து டவுன் பஸ்கள் அதிகம் விடப் படுகின்றன.
இந்த பஸ்கள் அனைத்தும் திருமலைக்கோயில் மலை அடிவாரத்துடன் நின்றுவிடும். மேலும், ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் வருவர் என்ற போதும், அவற்றை மலை மீது ஏற மலைச்சாலையில் அனுமதிப்பதில்லை. அனைத்து வாகனங்களும் கீழேயே நிறுத்தப் படும் என்றும், கும்பாபிஷேகம் முடிந்த பின்னரே வாகனங்களை மேலே அனுப்ப ஏற்பாடு செய்யப் படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் பத்திரிகையாளர்களுக்கான அழைப்பிதழ்கள் கூட கோயில் நிர்வாகம் மூலம் எவருக்கும் அனுப்பப் படவில்லை. பத்திரிகையாளர்களுக்கான அனுமதிச் சீட்டும் வழங்கப் படவில்லை. எவருடைய வாகனங்களும் கும்பாபிஷேகம் முடியும் வரை மலைமீது ஏற அனுமதிக்கப் பட மாட்டாது என்று கோயில் நிர்வாகம் கூறிவிட்டதால், ஊடக செய்தியாளர்கள் கோயில் நிர்வாகத்துக்கு தங்களது எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.