
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் கடைசி முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை மே 1ல் அதிகாலை 5:30 முதல் 5:55 மணிக்குள் நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப்பல்லக்கில் அழகர்மலையிலிருந்து மாலை மதுரையை நோக்கி புறப்பாடாகினார்.
பின்னர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கன்னனேந்தல் வழியாக நேற்று மதுரை வந்த கள்ளழகர், மூன்றுமாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.
மதுரை மாநகர் பகுதிக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றுவருகிறது. அதனை தொடர்ந்து தல்லாகுளம் கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி நாளை (மே 1) அதிகாலை வெள்ளி குதிரை வாகனத்தில் வீரராகவ பெருமாள் வரவேற்க, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளவுள்ளார்.
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.



