தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
விடுதலைப் புலிகள் வீழ்த்தப் பட்டதை அடுத்து, 2009 ஜூலை மாதத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. எம்.பி, எம்.எல்.ஏகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்து, வைகோவுக்கு ஓராண்டு சிறைதண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு எதிராக போதிய ஆராதங்கள் இல்லாத நிலையிலும், சட்டத்திற்கு புறம்பாகவும் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
தேச துரோக குற்றச்சாட்டுகளுக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஊகங்களின் அடிப்படையிலேயே தான் குற்றவாளி என தீர்மானிக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட வைகோ, அதிகபட்ச தண்டனை கொடுங்கள் என தாம் கேட்டிருந்த நிலையில், குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு கையெழுத்து இட்டதாகவும், அதற்கு தாம் ஆட்சேபனை தெரிவித்த பின், நீதிபதி அந்தப் பத்தியை நீக்கியதாகவும், தீர்ப்பு எழுதிய பின் அதை திருத்திய செயல்பாடு குற்ற விசாரணை நடைமுறைச் சட்டத்துக்கு எதிரானது என்றும் மனுவில் வைகோ கூறியுள்ளார்.
மேலும் அந்த மேல்முறையீட்டு மனுவில், 2009 மே 19ல் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இறந்தார் என்பதற்கோ, அதனால் தமிழக மக்களின் மனநிலை ஆவேச நிலையில் இருந்தது என்பதற்கோ, மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தது என்பதற்கோ எவ்வித ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்யவில்லை!
கவனத்திற்கு வந்த தகவல்களின் அடிப்படையிலும், அனுமானத்தின் அடிப்படையிலும் நீதித்துறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட கூடாது! ஆனால் இதுபோன்ற காரணிகள் நீதிபதியின் மனதில் கோலோச்சியதால்தான் தான் குற்றவாளி என தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தன் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வைகோ கோரியுள்ளார்.