அத்தி வரதரை மீண்டும் தண்ணீருக்குள் அமிழ்த்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று பரனூர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்
யாருக்கும் பயந்து சுவாமியை ஒளித்து வைக்கக் கூடிய காலம் இது இல்லை என்பதால் காஞ்சி அத்தி வரதரை பக்தர்கள் தினமும் சேவிக்கும் வகையில் வெளியிலேயே வைக்க வேண்டும் என்று பரனூர் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!
காஞ்சி அத்தி வரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து வழிபடும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது! ஒரு காலத்தில் மன்னர் ஆட்சியின் போது மொஹலாய சுல்தான்களின் படையெடுப்புகளுக்கு அஞ்சி கோவில் சிலைகளை பாதுகாப்பாக வைக்க பக்தர்கள் கடைபிடித்த வழி முறைகளில் இதுவும் ஒன்று என்று ஒரு சாரார் கூறுகின்றனர்!
குண்டத்தில் இருந்து எழுந்த அத்தி வரதரை குளிர்விப்பதற்காக குளத்தில் எழுந்தருளச் செய்வது வழக்கம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
இந்நிலையில் அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்கத் தேவையில்லை என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசிய போது பல நூற்றாண்டுகளாக அத்திவரதர் காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாளாக மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருந்தார். 250 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட படையெடுப்புக் காலத்தில் அத்திவரதரை அங்கிருக்கும் திருக்குளத்தில் ஒளித்து வைத்தனர்.
இது காஞ்சிபுரம் கோவிலில் துவஜஸ்தம்பத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது! தற்போது அத்தி வரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்! 40 ஆண்டுகளாக தண்ணீருக்குள் இருந்த மூர்த்தி எந்தவித பழுதும் இல்லாமல் இருப்பதை தினமும் பல பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்து வருகின்றனர்!
பழைய வழக்கப்படி மூர்த்தியை தண்ணீருக்குள் தான் அமிழ்த்து வைப்போம் என்றால் தெய்வமாக பார்த்துக் கொண்டிருந்த இவ்வளவு மக்களின் மனதுக்கும் கஷ்டமாக இருக்கும்!
மறுபடியும் அவ்வாறு ஒளித்து வைக்க வேண்டிய அவசியமில்லை யாருடைய கலகத்திற்கும் பயந்து ஒளித்து வைக்க வேண்டிய தேவையில்லை. இப்போது அந்த காலமும் இல்லை என்பதால் கோவிலில் அனைவரும் தரிசிக்கக் கூடிய ஓர் இடத்தில் வைத்து விடலாம்.
இது என் தனிப்பட்ட கருத்து அல்ல! பக்தர்கள் பலர் இன்னமும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் கூறினார்!