பாலிவுட் டோலிவுட் என ரவுண்டு கட்டிய நடிகை ஷ்ரேயா, ரஷ்ய தொழிலதிபர் ஆந்திரி கோஸ்சேவை வரும் மார்ச் 17ஆம் தேதி மணக்க இருக்கிறார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
17 வருடங்களுக்கு முன் 2001ல் வெளியான இஷ்டம் தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் ஷ்ரேயா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.
ஷ்ரேயா தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கல்லூரிப் பெண்ணாக இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். தமிழில் ரஜினி, விஜய், ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, தனுஷ், சிம்பு என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்து வருகிறார் ஷ்ரேயா. மேலும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் தலா ஒன்று என இரு படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஷ்ரேயா, தனது நீண்ட நாள் ரஷ்ய நண்பரைத் திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவற்றை மறுத்து வந்த ஷ்ரேயா, தான் இன்னும் திருமணத்துக்கு தயாராகவில்லை என்றே கூறிவந்தார். இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த தன் நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான ஆந்திரி கோஸ்சேவ்வை அவர் திருமணம் செய்ய உள்ளதாகவும், மார்ச் 17ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியானது.