சேலம்:
மனைவிக்குத் தெரியாமல், நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட அதிமுக கவுன்சிலர் குறித்த தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி 20 ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ரவீந்திரன். அ.தி.மு.க வைச் சேர்ந்த இவரின் மனைவி சுதா, சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், “எனக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் ரவீந்திரன் 20 ஆவது வார்டு கவுன்சிலராகவும், அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். என்னுடைய கணவர், எனக்குத் தெரியாமல், சில ஆண்டுகளுக்கு முன்னர் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் புவனேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
அடுத்து, பெரியார் நகரைச் சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகள் புவனேஸ்வரியையும், பழைய சூரமங்கலம் பாலு மனைவி சந்தியா என்பவரையும், அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரையும் சேர்த்து மொத்தம் நான்கு பெண்களைத் திருமணம் செய்துள்ளார்.
சந்தியா, சத்யா இருவரும் அம்மா உணவகத்தில் வேலை செய்பவர்கள். அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களைத் திருமணம் செய்திருக்கிறார். இதைப் பற்றி நான் கேட்டால், இந்தப் பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றும் நீ விருப்பம் இருந்தால் என்னுடம் இரு, இல்லையெனில் விவாகரத்து வாங்கிகொண்டு போ என்றும் கூறுகிறார்.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், அவரை எதுவும் செய்ய முடியவில்லை. கேட்டால், “நான் கவுன்சிலர். எனக்கு அமைச்சர் மற்றும் நிறைய பேர் உதவி செய்வார்கள். உனக்கு யார் உதவி செய்வார்? பதவி இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார். முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்னையில் தலையிட்டு என் கணவரின் கவுன்சிலர் பதவியையும், வார்டு செயலாளர் பதவியையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
மனைவிக்குத் தெரியாமல் நான்கு திருமணம்: அதிமுக கவுன்சிலரால் பரபரப்பு
Popular Categories


