
மதுரையில் பால் முகவர் படுகொலை செய்யப் பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று பால் முகவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் மாநிலத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில்…
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வந்த பால் முகவர் ரமேஷ் (வயது 28) இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனியார் பால் நிறுவனத்தின் பாலை தனது வீட்டு முன் இறக்கி வைத்து விட்டு வீட்டுக்குள் சென்றபோது, அவரை பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள்ளேயே வைத்து இன்று அதிகாலை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்த மாபாதகச் செயலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் தொடர்ந்து அரங்கேறி வருவது வேதனை அளிக்கிறது.
எனவே சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வந்த பால் முகவர் ரமேஷ் அவர்களை கொலை செய்த கும்பலை கண்டுபிடித்து, அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.

