சென்னை:
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை இன்று வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி,
“சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு குறித்து மண்டலம் வாரியாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. கோவையைத் தொடர்ந்து, இப்போது மதுரையில் 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, சென்னை, திருச்சியில் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பத்தில் (படிவம்-6) செல்லிடப்பேசி எண் கொடுத்தவர்களுக்கு, பட்டியலில் சேர்க்கப்பட்டதன் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும். மேலும், இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், தங்களது பெயரைச் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம். கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர் பட்டியலில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட அடுத்த இரு நாள்களில், புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை அச்சிடும் பணி நிறைவுபெறும். அதன் பிறகு, வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு 10 நாள்களுக்குள் வழங்கப்படும். புதிய வாக்காளர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதன்மூலம், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வது எளிதாக இருக்கும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 82 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. தமிழகத்தில் 8 ஆயிரம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. பிகாரில் இருந்து 50 ஆயிரம் இயந்திரங்களும், குஜராத்திலிருந்து 15 ஆயிரம் இயந்திரங்களும், மகாராஷ்டிரத்திலிருந்து 10 ஆயிரம் இயந்திரங்களும் கொண்டு வரப்படுகின்றன. இந்த இயந்திரங்களை வாக்குப் பதிவுக்காகத் தயார் செய்யும் பணி, பிப்ரவரி 1 முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை நடைபெறும்… என்றார்.


