நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஷ்ணுப்பிரியா ஒரு வாலிபரை காதலித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் இரவு 10 மணிக்கு மேல் அவரிடம் போனில் பேசி உள்ளார். சில நேரம் ஒரு மணி நேரம் கூட அவர்கள் போனில் பேசி உள்ளனர். 2 நாள் விடுப்பில் ஊருக்கு சென்ற விஷ்ணுபிரியாவுக்கு மாப்பிள்ளை பார்க்க இருப்பதாக அவரது தந்தை ரவி, தாயார் கலைச்செல்வி ஆகியோர் கூறினர்.
அவர் ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறியதை பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த அவருக்கு போலீஸ் பணியிலும் அடுத்தடுத்து மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்து இருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
நேற்று கடலூர் சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் விஷ்ணுபிரியாவின் தாயார் கலைச்செல்வியிடம் காதல் விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போது அவர் மயங்கி விழுந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் தோல்வி மற்றும் பணியின் போது சரியாக செயல்பட முடியாத மனநிலை ஆகியவை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.காதலன் தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் தோல்வியால் தற்கொலை என்பதை மறைத்து நாமக்கல் எஸ்.பி மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் அவர் தற்கொலை செய்ததாக வதந்தி பரப்பி போலீஸ் மீது களங்கத்தை உருவாக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
போலீஸ் துறை மீது களங்கத்தை உருவாக்கிய அதிகாரி உள்ளிட்ட சிலர் மீது அடுத்த கட்டமாக ஒழுங்கு நடவடிக்கை பாய உள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


