தர்மபுரி மாவட்டம் அருகே, கல்லூரி சிறப்பு வகுப்பு குறித்து, தந்தை சந்தேகம் அடைந்ததால், ஒரு தனியார் கல்லூரியில், பி.எஸ்சி படித்து வந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரியை அடுத்த, அதியமான்கோட்டை நேரு நகரை சேர்ந்த துரை மகள் ஷோபனாதேவி, 18. இவர், நேற்று முன்தினம் பக்ரீத் விடுமுறை அன்று, கல்லூரியில் சிறப்பு வகுப்புக்கு செல்வதாக துரையிடம், ஷோபனாதேவி தெரிவித்துள்ளார். அப்போது, அவரது தந்தை துரை கல்லூரி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கல்லூரியில் நடக்கும் சிறப்பு வகுப்பு குறித்து கேட்டு தெரிந்துள்ளார்.
தனது தந்தை தன் மீது சந்தேகம் அடைந்ததால், சிறப்பு வகுப்புக்கு செல்லாமல், மனவருத்தத்தில் இருந்துள்ளார். வழக்கம் போல், நேற்று முன்தினம் இரவு ஷோபனாதேவி தனது அறைக்கு தூங்க சென்றார்.
நேற்று காலை அவரது அறைக்கு சென்ற பெற்றோர், ஷோபனாதேவி தூக்கில் இறந்த நிலையில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதியமான்கோட்டை போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


