வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி, அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், பெருமாள் கோவில் எதிரே நடந்தது. 4வது வட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.
அந்த கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசியதாவது: இந்த தொகுதி எம்.எல்.ஏ., துரைமுருகனுக்கு படிக்க உதவியது எம்.ஜி.ஆர்., தான். எம்.ஜி.ஆர்., உதவி செய்யாமல் இருந்திருந்தால், துரைமுருகன் படித்து இருக்க மாட்டார். ஆனால், துரைமுருகன் நன்றி மறந்தவர். கடந்த தேர்தலில் காட்பாடி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, அப்புவிடம் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் துரைமுருகன் வெற்றி பெற்றார்.
அடுத்த முறை அவருக்கு மக்கள் பெரிய தோல்வியை வழங்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சிக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்து வருகிறது. பல சாதனைகள் செய்யப்படுகிறது. அதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என, ஸ்டாலின் நடை பயணம் ஆரம்பித்துள்ளார். அவர்கள் என்ன செய்தாலும், அ.தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது. 2011 முதல் ஆட்சி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி தான். இனி தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி தான் இருக்கும். என நடிகர் ராமராஜன் பேசினார்.


