டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலையில் உண்மை வெளிவராவிட்டால் வழக்கு : யுவராஜ்

Published:

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலையில் போலீசாரால் தேடப்படும் யுவராஜ் இன்று காலை பரபரப்பான ஆடியோ ஆதாரத்தை சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஆடியோவில் அவர் பேசியதாவது:–

கொலை வழக்கில் பெண் உள்பட 6 பேர் கைதானது முழுக்க முழுக்க சட்ட விரோதம். இதை டி.எஸ்.பி விஷ்ணுபிரியா ஏற்கவில்லை. மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதையும் அவர் விரும்பவில்லை. இந்த வழக்கில் அவர் பெயரளவுக்குத்தான் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். அவரை உண்மையான விசாரணை அதிகாரியாக செயல்பட விடவில்லை. ஆனால் இந்த வழக்கில் உண்மையில் வேறு ஒரு அதிகாரிதான் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். அவருக்கு என்ன மாதிரியான அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை நான் வெளியிடுவேன். .

இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது தான் வெளி உலகுக்கும், இந்த நாட்டுக்கும் தெரியும். ஆனால் தர்மபுரி ,சேலம், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல். தேனி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து வந்து போலீசார் அடித்து சித்ரவதை செய்த தகவல் வெளியாகவில்லை.

ஒரு கொலை வழக்கு என்றால் அதில் அந்த கொலை வழக்கு மற்றும் அதனை சார்ந்த விஷயங்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இதில் எல்லாமே அதிகப்படியான விஷயங்களாக இருக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கின் விசாரணை வேறு திசையில் செல்கிறது.

இந்த கொலை வழக்கு எப்.ஐ.ஆர். போடும் வரை நான் இருந்தேன். ஆனால் வழக்கு திசை மாறியதால் நான் தலைமறைவாகிவிட்டேன். தற்போது நான் கேரளாவில் இருக்கிறேன். நான் கோவை கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டு இருந்தேன். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தேன். ஆனால் அரூரில் 2 பேரை கைது செய்தவுடன் சரண் அடைய மறுத்து விட்டேன்.

மேலும் அந்த பெண் அதிகாரி விஷ்ணுபிரியாவை கைதானவர்கள் முன்னிலையில் உயர் அதிகாரி தரக்குறைவாக பேசியது எல்லோருக்கும் தெரியும். விஷ்ணுபிரியாவை செயல்பட முடியாமல் அவரை தடுத்து வைத்து இருந்தனர்.

மேலும் விஷ்ணு பிரியா கொலை வழக்கில் உண்மை வெளியாகாவிட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன். விஷ்ணுபிரியா கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை சரியான திசையில் போக வில்லை. உயர் அதிகாரி நிர்பந்தம் காரணமாக அவர் நிர்பந்தக்கொலை செய்யப்பட்டார்.

அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் விஷ்ணுபிரியா வழக்கு வேறு திசையில் செல்கிறது. உயர் அதிகாரியின் நிர்பந்தம் காணமாக அவர் கொலை செய்யப்பட்டார்.

கோகுல்ராஜ் வழக்கை போல் இந்த வழக்கும் வேறு திசையில் பொய் வழக்காக செல்கிறது என யுவராஜ் பேசி உள்ளார்.

மேலும் யுவராஜ் விஷ்ணுபிரியாவுடன் பேசிய பேச்சையும் அதில் வெளியிட்டு உள்ளார். தான் கேரளாவில் இருப்பதாகவும், 6 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததில் உடன்பாடு இல்லை என்று விஷ்ணுபிரியா கூறி சரண் அடையுமாறு அவர் யுவராஜை கேட்டுக் கொள்ளும் விவரங்களும் அந்த ஆடியோவில் வெளியாகி உள்ளன.

மேலும் பல வழக்கு விவரங்களை யுவராஜ் கூறி இவையெல்லாம் பொய் வழக்கு என்றும், ஒரு அதிகாரி அந்த வழக்குகளை போட வைத்து தன்னை காப்பாற்ற நாடகம் ஆடுவது போல் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதாகவும் கூறி உள்ளார்.

பொய் வழக்கு போட்ட உயர் அதிகாரி விரைவில் ஜெயிலுக்கு போவார் என்றும் யுவராஜ் கூறி உள்ளார். அந்த உயர் அதிகாரி பெயரையும் அவர் அடிக்கடி கூறி அவரை திட்டியும் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி உள்ளார். இப்படி அடுக்கடுக்கான தகவல்கள் அடங்கிய ஆடியோவை யுவராஜ் வெளியிட்டுள்ளாதல் தமிழக காவல் துறை வட்டாரங்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img