துடைப்பத்தை வைத்து போஸ்டர்களிலும், போட்டோக்களிலும் போஸ் கொடுத்து கொண்டு, நாடகம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் இந்த மனநிலையை விட்டு வெளியேவந்து பின்னர் யதார்த்தத்தை பற்றி விமர்சிக்கட்டும் என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று, இந்தியாவில் தயாரியுங்கள் என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இந்தியாவில் தயாரியுங்கள் என்பதைவிட இந்தியாவை உருவாக்குங்கள் என்பதே முக்கியம் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் நேற்று கருத்து பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான எங்கள் அரசில் சுகாதாரம், கல்வி, குடிநீர், பாதுகாப்பு, நீதி, உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம். மின்சார உற்பத்தி துறையை பற்றி கூறப்பட்டுவந்த தவறான விமர்சனங்கள் எல்லாம் எங்களது நேர்மையான அரசு நிர்வாகத்திறனால் தவிடுப்பொடியாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தயாரியுங்கள் என்பதைவிட மேற்கண்ட துறைகளில் முதலீடு செய்து இந்தியாவை உருவாக்கும் பணியே மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல திட்டமாக இருக்கும். மக்கள்தான் நமது சிறந்த சொத்து. அந்த மக்களில் முதலீடு செய்தால் போதும். முதலில் இந்தியாவை நாம் உருவாக்கினால் போதும். பின்னர், உலகம் தானாகவே இந்தியாவில் தயாரிக்க தொடங்கிவிடும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் முயற்சிகளுக்கு மாற்றாக கருத்து வெளியிட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா, கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.
துடைப்பத்தை வைத்து நாடகம் நடத்திக் கொண்டு, போஸ்டர் மற்றும் புகைப்படங்களுக்குள் அடைபட்டு கிடக்கும் கெஜ்ரிவால் போன்றவர்கள் முதலில் அந்த மனநிலையில் இருந்து வெளியில்வந்து, பிறகு யதார்த்தத்தைப் பற்றி அவர்கள் விமர்சிக்கலாம்.
மோடியின் அரசைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, டெல்லியைப் பற்றி ஆவர் கவலைப்பட வேண்டும். டெல்லி நகரம் சந்தித்துவரும் பிரச்சனைகளைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டும் என மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.


